search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் வன்முறை"

    • சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது.
    • மதுரையில் 34 மாதங்களில் 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகரில் மதுரை டவுன், மதுரை தெற்கு, தல்லாகுளம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேற்கண்ட 4 காவல் நிலையங்களிலும் சிறுமிகளுக்கு எதிராக பதி வான போக்சோ வழக்குகள் தொடர்பாக புள்ளி விவர பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி மதுரை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 132 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 124 வழக்குகளும், 2022-ம் ஆண்டு அக்டோபர் வரை 150 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

    அதாவது கடந்த 34 மாதங்களில் மட்டும் மொத்த மாக 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த 5-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது.

    எனவே அவர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாலியல் சில்மிஷம் தொடர்பாக குழந்தைகள் ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் 14 ஆயிரம் அப்பாவி பெண்களை விபசாரத்தில் தள்ளியது அம்பலம்
    • ஒவ்வொரு ‘வாட்ஸ் அப்’ குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    நகரி :

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 'ஹைடெக்' விபசாரம் நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெலுங்கானாவின் பேகம் பேட்டையை சேர்ந்தவர் முகமது சல்மான்கான் என்கிற சமீர். இவர் முதலில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்தார்.

    அப்போது விபசார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஓட்டலில் தங்குவதை கவனித்த அவர், சுலபமாக பணம் சம்பாதிக்க இது சிறந்த வழி என முடிவு செய்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் உள்ள சமீருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து சோமாஜி கூடா பகுதியை மையமாக கொண்டு விபசார விடுதி நடத்த ஆரம்பித்தனர். இவர்களோடு மொத்தம் 17 பேர் முக்கிய அமைப்பாளர்களாக வேறு வேறு மாநிலங்களில் 'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம் இதை நடத்தி வந்தனர்.

    ஒவ்வொரு 'வாட்ஸ் அப்' குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 190 இளம்பெண்களுடன் விபசார விடுதிகளை நடத்தியுள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள இவர்களது ஹைடெக் விபசார தொழில் வெளிச்சத்துக்கு வந்தது. வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி பெண்களை புகைப்படம் எடுத்து அவற்றை 'வாட்ஸ்அப்' குழு மூலமாக அனுப்பி வைப்பார்கள். அவற்றை பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை தேர்ந்தெடுத்து கால் சென்டர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

    கால் சென்டர் ஊழியர்கள் குறிப்பிட்ட தங்கும் விடுதியில் விபசார அழகி இருப்பார் என்றும், அவருக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு தொகையை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்வார்கள்.

    அந்த பணத்தில் 30 சதவீதம் விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், 35 சதவீதம் அந்தப்பெண்களின் படங்களை விளம்பரம் செய்பவர்களுக்கும் கால் சென்டர் பிரதிநிதிகளுக்கும் கொடுப்பார்கள். எஞ்சிய 35 சதவீத பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு கொள்வார்கள்.

    விபசாரத்திற்கு பெண்களை கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக நிர்வாகிகள் ஐதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கொல்கத்தா, அசாம் மாநில பெண்களோடு தாய்லாந்து, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், ரஷிய நாட்டு பெண்களையும் வைத்து கூட இவர்கள் விபசாரம் நடத்தியுள்ளனர்.

    வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் ஆதார் கார்டுகளை தயாரித்து இவர்களை இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.
    • சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடுகளின் பொது சபை (ஐ.நா) வெளியிட்டுள்ளது.

    * ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியா குடரெஸ் கூறுகையில், "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார்.

    * உலகளவில் 30 சதவீத பெண்கள் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.

    * 15 முதல் 19 வயதுடைய இளம்பெண்களில் 24 சதவீதம் பேர் நெருங்கிய உறவில் இருக்கும் நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

    * ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமி கள் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள்.

    * 2021-ம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் (81,100) பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 56 சதவீதம் (45,000) பேர் கணவர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

    * ஆசியாவில் சுமார் 17,800 பெண்கள் தங்கள் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.

    * இதற்கு நேர்மாறாக, 2021-ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட ஆண்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வாழ்க்கை துணை அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்களை பொறுத்தவரை குடும்பத்திற்கு வெளியே மற்றவர்களால் கொல்லப்படும் அபாயம் அதிகம் உள்ளது.

    * இந்தியாவில், 2021-ம் ஆண்டில் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    * பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு 49 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    * 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது.

    * இந்தியாவில் 2021-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் பெண்கள் இறந்ததாக 6,589 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020-ம் ஆண்டை ஒப்பிடும்போது 3.85 சதவீதம் குறைந்துள்ளது.

    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற்கான சான்று இல்லை.
    • இன்று வரை பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறி வரும் உலகில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நிகழ்கின்றன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்று கூறி வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற்கான சான்று இல்லை. இன்று வரை பல்வேறு வகையான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு பெண்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்ற சிறப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    உலகளவில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை வெளி உலகிற்கு எடுத்து கூறி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வழிவகுப்பதே இந்நாளின் நோக்கமாகும். 1960-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் என்று அழைக்கப்படும் 3 சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் 'மறக்கமுடியாத வண்ணத்துப்பூச்சிகள்' என்று பெண்களுக்கு எதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினார்கள். மிராபெல் சகோதரிகளை நினைவு கூறும் விதமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நவம்பர் 25-ந் தேதி (இன்று) ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    ஐ.நா.சபையானது 1999-ம் ஆண்டில் இத்தினத்தை சட்ட பூர்வமாக அங்கீகரித்தது. பாலியல் வன்கொடுமைகள், அடிமைத்தனம், குடும்ப வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை இந்நாள் வலியுறுத்துகிறது. மேலும் பிரச்சினையின் அளவு மற்றும் உண்மை தன்மை பெரும்பாலும் மறைக்கப்படுவதை எடுத்து கூறுகிறது. 1993-ம் ஆண்டில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை மனித உரிமை மீறலாக அங்கீகரித்து இந்த வகையான பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதற்கான வழியை அமைத்து கொடுத்தது.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவீதம் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களால் தான் ஏற்படுகிறது என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கண்டிப்பது, பெண்கள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். வருங்கால தலைமுறைக்கு பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம் என்று இந்நாளில் உறுதி கொள்வோம்.

    • 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகள் பதிவாகியுள்ளது.
    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகள் பதிவாகிவுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிடும். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,377 வழக்குகளும், பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும் 1,788 வழக்குகளில் சிறார்கள் தொடர்பு உள்ளது. 1,076 சைபர்கிரைம் வழக்குகளும் பதிவாகி உள்ளன.

    இந்தநிலையில் தற்போது, இந்தியாவில் உள்ள மாவட்ட வாரியான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரகம் மற்றும் திருச்சி மாநகரம், திருச்சி ரெயில்வே போலீஸ் ஆகியவற்றில் கடந்த 2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் 144 வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் 96 வழக்குகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 86 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 258 வழக்குகளும், திருச்சி மாநகரில் 104 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 67 வழக்குகளும், கரூரில் 85 வழக்குகளும், பெரம்பலூரில் 60 வழக்குகளும், புதுக்கோட்டையில் 212 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 214 வழக்குகளும், திருச்சி மாநகரில் 87 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது புதுக்கோட்டை மாவட்டம் தவிர மற்ற 4 மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.

    இதேபோல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூரில் 121 வழக்குகளும், கரூரில் 149 வழக்குகளும், பெரம்பலூரில் 81 வழக்குகளும், புதுக்கோட்டையில் 74 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 126 வழக்குகளும், திருச்சி மாநகரில் 78 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 49 வழக்குகளும், கரூரில் 33 வழக்குகளும், பெரம்பலூரில் 69 வழக்குகளும், புதுக்கோட்டையில் 56 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 158 வழக்குகளும், திருச்சி மாநகரில் 46 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    • அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.
    • பெண்ணின் ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் எழில்பரதன் பதிவிட்டதாக தெரிகிறது.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதனும் அவரது நண்பரும் வந்தனர். அவர்கள், கள்ளக்காதலனை கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து விரட்டினர். இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதன்பின் தனியாக சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை மிரட்டி எழில்பரதனும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும் உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை.

    இதை சாதகமாக பயன்படுத்தி, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அந்த பெண் பணம் தராததால், அவரை மிரட்டும் வகையில் பெண்ணின் ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் எழில்பரதன் பதிவிட்டதாக தெரிகிறது. இதை அறிந்த அந்த பெண் மனவேதனை அடைந்தார்.

    இந்தநிலையில் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது.
    • பாலியல் பலாத்கார வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.

    புதுடெல்லி :

    பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.

    இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு தண்டனை விதித்தது. ஆனால், இருவிரல் சோதனை முடிவு அடிப்படையில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு மாற்றி, குற்றவாளியை விடுதலை செய்தது.

    ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    விசாரணை முடிவில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதி செய்தும், ஐகோர்ட்டு வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்துசெய்தும் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.

    அந்த தீர்ப்பில், கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது. இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அனைத்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்க வேண்டும்.

    இதை மீறி இரு விரல் சோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் தவறான நடத்தை குற்றவாளியாக கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • நிலத்தகராறில் 5 பேரை சிக்க வைக்க நாடகம் அரங்கேற்றியது அம்பலம்.
    • அவர் கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி :

    டெல்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்களாக கூட்டாக கற்பழித்ததாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார். அவர் சாக்குமூட்டை ஒன்றில் கட்டி வீசப்பட்டு இருந்ததாகவும், அவரது மர்ம உறுப்பில் இரும்பு கம்பி சொருகியதுடன், கை-கால்கள் கட்டப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

    உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் காசியாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    நிலத்தகராறு காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் இந்த பாதக செயலை அரங்கேற்றியதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசாரும் கைது செய்தனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் அரங்கேறிய நிர்பயா சம்பவம் போல, நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலத்தில் பெரிய அளவில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    இதை நேற்று முன்தினம் காசியாபாத் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக அந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

    மேலும் இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு போலீசார் அறிக்கை அளித்து உள்ளனர். அதன்படி நிலத்தகராறு காரணமாக அந்த 5 பேரை போலீசில் மாட்டி விடுவதற்காக நடந்த நாடகம் இது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதற்காக கற்பழிப்பு செய்தியை ஊடகங்களில் பரபரப்பாக்குவதற்காக ரூ.5 ஆயிரம் கைமாறப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    இதைப்போல, அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் வெளிநாட்டு பொருள் எதுவும் இருந்ததாக முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டவில்லை என கூறியுள்ள போலீசார், டெல்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் சாதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அந்த பெண்ணின் உடல்தகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இரண்டொரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.

    அதேநேரம் அவரது உடலில் இருந்து உயிரணு எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளது. இதன் மூலம் அவர் கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இந்த தகவல்களை டெல்லி மகளிர் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் பெண்ணின் கூட்டாளிகளான 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வரும் அவர்கள், இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

    டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கற்பழிப்பு புகார், வெறும் நாடகம் என போலீசார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நிர்பயா சம்பவத்தை போல மற்றொரு நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
    • இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    டெல்லியை சேர்ந்த நிர்பயா என்ற இளம்பெண் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழித்து, சித்ரவதை செய்யப்பட்டு பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 நாட்களுக்குப்பின் சிங்கப்பூரில் உயிரிழந்தார். நெஞ்சை உலுக்கிய இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதைப்போல மற்றொரு சம்பவம் தற்போது டெல்லி அருகே நடந்து உள்ளது. டெல்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 5 பேர் கும்பலால் சீரழிக்கப்பட்டு பலவித சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

    நந்த் நகரியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், வேறு சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில் அந்த பெண் தனது சகோதரரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த 17-ந்தேதி குருகிராம் சென்றுள்ளார். அது முடித்து திரும்பியவரை 5 பேர் கும்பல் தங்கள் காரில் கடத்தி சென்றுள்ளது.

    டெல்லியின் எல்லைப்பகுதியான காசியாபாத்துக்கு கொண்டு சென்ற அந்த கும்பல், பின்னர் மாறி மாறி அவரை கொடூரமாக கற்பழித்து இருக்கிறது. அத்துடன் பலவிதமான சித்ரவதைகளையும் அந்த பெண்ணுக்கு அளித்து உள்ளனர்.

    பின்னர் பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி, ஒரு சாக்கு மூட்டையில் கட்டி நேற்று அதிகாலையில் சாலையோரம் வீசியுள்ளனர்.

    வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்த அப்பகுதியினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு காசியாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறியுள்ள டாக்டர்கள், முக்கியமான உள்ளுறுப்புகள் எதுவும் சேதமடையவில்லை என்றும் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே இந்த கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் குறித்து பெண் அளித்த தகவல்களின் பேரில் உடனடியாக போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் அவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இதன் பயனாக அந்த கும்பலை சேர்ந்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறின் பேரில் இந்த கொடூரத்தை அரங்கேற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நிர்பயா சம்பவத்தை போல மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.

    இது தொடர்பாக காசியாபாத் போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முதல் தகவல் அறிக்கையின் நகல் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் பயங்கரமாகவும், மனதை தொந்தரவு செய்யும் வகையிலும் இருப்பதாக கூறியுள்ள அவர், இது நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.

    • குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
    • இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

    நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க கொண்டு வந்த சட்டம்தான் போக்சோ. இதன் முழு விரிவாக்கம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்பது ஆகும். இந்த சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    விழிப்புணர்வு

    குறிப்பாக கோவை மாவட்டத்தில் போக்சோ சட்டம் தொடர்பாக மாணவிகள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் போலீசார் இணைந்து பள்ளி குழந்தைகள், கிராமப்புறங்களில் போக்சோ சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு மாணவிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்படும் மாணவிகள் தங்களின் பெற்றோரிடமோ, அல்லது ஆசிரியரிடமோ தெரிவிப்பதால், அவர்கள் போலீசில் புகார் செய்து குற்றங்கள் செய்யும் நபர்களை கைது செய்து வருகிறார்கள். மேலும் போக்சோ தொடர்பாக விழிப்புணர்வை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தி, இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    பயம் இல்லை

    சசிகலா (ஆசிரியை, அன்னூர்):- போக்சோ சட்டம் தொடர்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே மாணவிகள் தைரியமாக இருக்கிறார்கள். இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. அத்துடன் வெளியே சொன்னால் தங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவார்களோ என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மாணவிகளிடம் அந்த பயம் இல்லை.

    கந்தசாமி (பொள்ளாச்சி):- கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில்தான் போக்சோ சட்டம் அதிகளவில் பதிவாகி வருகிறது. அதுபோன்று அங்குதான் குழந்தை திருமணமும் அதிகமாக நடந்து வருகிறது. போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதுதான் இதன் வெளிப்பாடு. எனவே இந்த பகுதிகளில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி அனைத்து குக்கிராமங்களுக்கும் அதிகாரிகள் நேரடியாக சென்று, பள்ளி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பெற்றோர் ஒத்துழைப்பு

    முத்துகிருஷ்ணன் (தொண்டாமுத்தூர்):- தற்போது அனைத்து பள்ளிகளிலும் நல்ல தொடுதல், (குட் டச்) தீய தொடுதல் (பேட் டச்) என்று குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். இதனால் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் குக்கிராமங்கள், மலைவாழ் பகுதியில் உள்ள மாணவிகளுக்கு சரியாக விழிப்புணர்வு சென்று சேரவில்லை. எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தாரணி (பள்ளி மேலாண்மை குழு தலைவர்) :- சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துகளை சொல்ல நாங்கள் முயற்சி செய்து, அதில் பெற்றோரும் பங்கேற்க கூறினால், பெற்றோர் யாரும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. அத்துடன் இதுபோன்ற நிகழ்ச்சிக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கிறார்கள். இதனால் போக்சோ தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை மாணவிகளிடம் எடுத்துச்சொல்ல முடியாமல் போய்விடுகிறது. என்னதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அதற்கு மாணவிகளின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக மாணவிகள் மத்தியில் சென்றடையும்.

    தைரியம் கிடைத்து உள்ளது

    கல்லூரி மாணவி:- நான் பள்ளியில் படிக்கும்போது போக்சோ சட்டம் குறித்து எங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனால் என்னைப்போன்ற மாணவிகளுக்கு தைரியம் ஏற்பட்டது. அத்துடன் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட்டாலே இந்த சட்டம் பாய்வதால், பலர் பயந்து வருகிறார்கள். எனவே குழந்தைகளின் நலன் கருதி, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

    பள்ளி மாணவிகள்:- பள்ளிகளில் எங்களுக்கு போக்சோ தொடர்பாக ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், யாராவது தவறான எண்ணத்தில் எங்களிடம் பேசினாலோ, அல்லது தொட்டாலோ நாங்கள் உடனே எவ்வித பயமும் இல்லாமல் ஆசிரியைகளிடம் சொல்லலாம் என்ற தைரியம் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    இளைஞர்களுக்கு விழிப்புணர்வு

    சந்தோஷ்குமார்:- போக்சோ என்றால் சிறுமிகளிடம் தவறாக நடந்தால் மட்டும்தான் நடவடிக்கை என்று இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் போக்சோ சட்டம் பாயும். எனவே மாணவர்களிடமும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறாக தொட்டால் நமது வாழ்க்கையே வீணாக போய்விடும் என்று இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    ராஜேஸ்வரி (காரமடை):- காலையில் இருந்து மாலை வரை குழந்தைகள் பள்ளிகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டு பேசுவதை விட ஆசிரியைகளிடம்தான் நன்றாக பேசுவார்கள். பெற்றோர் சொன்னால் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர்கள் கூறினால் அதை கேட்பார்கள். எனவே பள்ளி குழந்தைகளிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்று தெளிவாக சொல்லிக்கொடுக்க வேண்டும். முக்கியமாக போக்சோ தொடர்பாக முழு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    விழிப்புணர்வு நிகழ்ச்சி காரணமாகஒரே பள்ளியில் 12 மாணவிகள் புகார்

    போக்சோ சட்டம் தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோதே 12 மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுதான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பயன் ஆகும். ஆனால் சில பகுதிகளில் மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தாலும், அவர்களின் பெற்றோர் ஒத்துழைப்பு

    தண்டனையை கடுமையாக்க வேண்டும்

    போக்சோ தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சராசரியாக கோவை மாவட்டத்தில் மாதத்துக்கு 13 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளில் 5 பேர் கர்ப்பம் அடைந்துதான் வருகிறார்கள். இதில் உறவினர்களால் பாதிக்கப்படும் சிறுமிகள்தான் அதிகம். சிலர் இந்த குற்ற வழக்கில் கைதாகி இருந்தாலும் போதிய ஆதாரம் இல்லாமல் எளிதாக வெளியே வந்து விடுகிறார்கள். எனவே சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    சட்டம் சொல்வது என்ன?

    போக்சோ சட்டத்தில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? அதில் கிடைக்கும் தண்டனை விவரங்கள் எவை என்பது குறித்து வக்கீல் ஒருவர் கூறும்போது, போக்சோ சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். அபராதமும் உண்டு. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, கட்டாயப்படுத்தி தொட வைப்பது பாலியல் சீண்டல் ஆகும். இதில் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, ஆபாசமாக பேசுவதும் போக்சோ சட்டத்தில்தான் வருகிறது. இதற்கு 5 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என்றார்.

    • வேலியே பயிரை மேய்வது போல் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது.
    • இன்று பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பள்ளிகளின் பெயரை கூறுவதில்லை.

    கோவை:

    நடிகை கஸ்தூரி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

    பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என நாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும், மர்மமான மரணங்களும் நிகழ்ந்து வருகிறது.

    வேலியே பயிரை மேய்வது போல் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இது வருத்தத்தை தருகிறது. இவை அரசியல் மற்றும் போலீசார் உதவியுடன் மூடி மறைக்கப்படுகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

    தற்போது காவல்துறை மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சம்பவத்தில் ஒரு உயிர் பிரிந்துள்ள நிலையில் இந்த சம்பவம் விவாத பொருளாக மாறிவிட்டது.

    சம்பவம் நடந்து 3 நாட்களாக மாணவியின் பெற்றோர் அமைதியாக விளக்கம் கேட்டபோது எந்த பதிலும் தராத அரசு கலவரம் நடந்த பிறகு பல அறிக்கைகள் தந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது காவல்துறையை நம்பாதீர்கள் என கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காவல்துறை காரணமல்ல, சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என கூறுகிறது.

    கடந்த ஆட்சி காலத்தில் இதே கருத்தை அன்று முதல்வராக இருந்த இ.பி.எஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியபோது விமர்சித்தவர்கள் தற்போது கூறுவதை எப்படி ஏற்க முடியும். இதேபோல் கடந்த ஆண்டு பத்மா சேஷாத்ரி பள்ளி மீதான பாலியல் குற்றச்சாட்டு சம்பவத்தில் அப்பள்ளியின் பெயரை தொடர்ந்து கூறி விமர்சித்தார்கள்.

    இன்று பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பள்ளிகளின் பெயரை கூறுவதில்லை. அதற்கும் அரசியல் தான் காரணம். தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கோவையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போக்சோ சட்டத்தை போன்று எத்தனை சட்டங்கள் வந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தினால் மட்டுமே பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறையும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடும் பட்சத்தில் அப்பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
    குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

    பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    நாட்டின் முன்னேற்றம், தனிப்பட்ட குடும்பத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தின் முன்னேற்றம், அதில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது. இதை உணர்ந்து, வருங்கால தலைமுறைக்குப் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து வளர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு நல்லவற்றை போதித்து வளர்ப்பதில் பெரும்பங்கு தாயைச் சார்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்ப்பது, பெண்களை மதித்து நடப்பது போன்றவற்றை, ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாற்றத்துக்கான செயல்பாடு நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்.
    ×